வட்டக் கோட்டை (அல்லது 'வட்ட வடிவத்தில் அமைந்த கோட்டை') (Vattakottai Fort) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்துள்ள கோட்டையாகும். திருவிதாங்கூர்
அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும் கடல் வழியாக அன்னியர்களின்
படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும்
படைவீடுகளுடன் இந்தக்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. எதிரிகளை
வீழ்த்துவதற்காக 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் இக்கோட்டை
கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையானது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 7
கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வரலாறு
இந்தக் கோட்டை டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கடற்படை அலுவலராக இருந்து, 1741 ஆம் ஆண்டில் இடம்பெற்ற குளச்சல் சண்டையில் திருவிதாங்கூர் படையுடன் மோதிய டச்சுத் தளபதியான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய்
மேற்பார்வையில் செங்கற்கோட்டையாக இருந்த இந்தக் கோட்டை கற்கோட்டையாக
மாற்றி கட்டப்பட்டது. காலப்போக்கில் அவர் திருவிதாங்கூர் அரசரின்
நம்பிக்கைக்கு உரியவராகி திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
கோட்டை அமைப்பு
1809 ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூர் அரசை தோற்கடித்தப்போது இந்த கோட்டையை அழிக்காமல் விட்டுவிட்டனர். உள் கொத்தளங்களுக்குள் பீரங்கிகள் கொண்டுசெல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் திருவிதாங்கூர் அரசின் சின்னமான யானைச் சிலைகள் வரவேற்கின்றன. கோட்டைக்குள் கண்காணிப்பு அறை, ஓய்வறை ஆயுதசாலை ஆகியவையும் உள்ளன. மண்டபத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் கி.பி 12 ம் நூற்றாண்டில் இந்த கோட்டை பாண்டியர்களின் கைவசமிருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.